மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாண்டவன்வெளி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபட்ட ஏழு இளைஞர்களும் ஒரு பெண்ணும் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று திங்கட்கிழமை முற்பகல் மட்டக்களப்பு பொலிஸ் தலைமைய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றதகவலின் அடிப்படையில் வீடு ஒன்றை முற்றுகையிட்டபோதே குறித்த 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தாண்டவெளி,பாரதி வீதி இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றில் இளைஞர் குழுக்களின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில் அது தொடர்பான தகவல்கள் மட்டக்களப்பு பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு பொலிஸ் குழுக்கள் திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டதுடன் அங்கிருந்து பெண் ஒருவரையும் ஏழு இளைஞர்களையும் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இளைஞர்கள் அனைவரும் உயர்தரம் கற்று வருபவர்கள் எனவும் அவர்கள் குறித்த வீட்டில் கஞ்சா, சிகரெட்டுகள் போன்ற போதைப்பொருட்களை பாவித்து வந்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட 27 வயதுடைய பெண் காத்தான்குடியை சேர்ந்தவர் எனவும் மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சுற்றிவளைப்பின்போது ஆண் உறைகள், கஞ்சா உட்பட ஏனைய சில பொருட்களையும் மீட்டுள்ளதுடன் வீட்டில் இருந்தவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் கல்வி கற்பதற்காக வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று, பெற்றோர் தமது மகனை கல்வி கற்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள நிலையில் மகன், தனது நண்பர்களை இணைத்துக்கொண்டு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டுவந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.