ஓராண்டுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியே வந்த கருணாநிதி.. உற்சாக வெள்ளத்தில் திமுகவினர்!

சென்னை: ஒரு வருடத்திற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்ச்சிக்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு ஓராண்டாக கருணாநிதி எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

xkarunanidhi6-19-1508421456.jpg.pagespeed.ic_.VlVs6vcYQvடிசம்பர் மாதத்தில் தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக காவேரி மருத்துவமனையில் கருணாநிதி சிகிச்சைபெற்றார். பின்னர், டிரக்யாஸ்டாமி சிகிச்சை முடிந்து கோபாலபுரம் வீட்டில் ஓய்வில் இருந்தார்.
மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவந்த கருணாநிதி வைரவிழா, முரசொலி பவள விழா என எந்த விழாவிலும் பங்கேற்கவில்லை. முக்கியப் பிரமுகர்கள் பலரும் அவரை வீட்டில் சந்தித்து வந்தனர்.

நோய் தொற்று காரணமாக அவர் வெளியே வரவில்லை என கூறப்பட்டது. இந்நிலையில், கருணாநிதி ஓராண்டுக்கு பிறகு முதல் முறையாக முரசொலி நாளிதழ் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில், நடைபெறும் பவள விழா கண்காட்சியை கருணாநிதி பார்வையிட்டார். அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கருணாநிதியின் வருகை திமுக தொண்டர்களை உற்சாகத்தில் மிதக்க வைத்துள்ளது. திமுக எம்.பி. திருச்சி சிவா கூறுகையில், விரைவிலேயே பொதுக்கூட்டங்களில், கருணாநிதி உரையாற்றுவதை தொண்டர்கள் கேட்க உள்ளனர் என நம்பிக்கை தெரிவித்தார்.