சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை தனது இயக்கத்தினர் நிலவேம்புக் குடிநீரை விநியோகிக்க வேண்டாம் என்ற நடிகர் கமலின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் வலுத்து வருகிறது.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதை தடுப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் நிலவேம்புக் குடிநீரை தமிழ்நாடு அரசாங்கம் மட்டுமல்லாது பல்வேறு அமைப்புகளும், தன்னார்வத் நிறுவனங்களும் மாநிலம் முழுவதும் விநியோகித்து வருகின்றன.
இந்நிலையில், நிலவேம்பு குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படுமென்றும், அதன் பயன்பாடு அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவி வருகின்றன.
நிலவேம்பு குறித்த புரளிகளை நம்ப வேண்டாமென்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனும் கூறியுள்ளனர்.
இந்நிலையில், இன்று நிலவேம்பு குறித்து தனது இயக்க தொண்டர்களுக்கு நடிகர் கமல் எழுதிய இரண்டு பதிவுகள் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது.
கமலின் கருத்துக்கு எதிர்வினையாற்றும் வகையில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், நிலவேம்பின் பயன்கள் குறித்து அலோபதி ஆராய்ச்சிகள் உண்டென்றும், அரசின் அதிகாரபூர்வமான விஞ்ஞான ரீதியான சிகிச்சை குறித்து வீண் வதந்தி பரப்பி வருவோரை கண்டிப்பதோடு நடவடிக்கை எடுப்போம் என்றும் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நிலவேம்பு குறித்த கமலின் கருத்துக்கு சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது மற்ற நிலைகளிலும் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.