இந்தியர்களை வெளியேற்றுமாறும் வேதனத்தை வழங்குமாறும், கல்குடா மதுபான தொழிற்சாலை முன் தொழிலார்கள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பு, கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சர்ச்சைக்குள்ளான மதுபான தொழிற்சாலை வாயிலை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

images (51)கல்குடா மதுபானசாலையில் தாங்கள் வேலை செய்தபோதும் கடந்த 7 ஆம் மாதத்தில் இருந்து தங்களை வேலையில் இருந்து நிறுத்தியிருந்த நிலையில் தாங்கள் வேலை செய்த சுமார் மூன்று மாதங்களுக்குரிய வேதனம், குறித்த கம்பனியின் வேலைகளை முன்னெடுத்துச் செல்லும் நிறுவனத்தால் வழங்கவேண்டிய தொகை இழுத்தடிப்பு செய்திருந்த நிலையில் நேற்றைய தினம் ஊழியர்களினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மதுபான நிறுவனத்தின் பிரதான வாயிலை மூடிய நிலையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டபோது, குறித்த இடத்திற்கு வருகைதந்த  கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கலகத்தடுப்பு பொலிசார், பொதுப்போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கவேண்டாம் என கேட்டுக் கொண்டமைக்கு அமைய பின்னர் ஆர்ப்பாட்டக்காரரால் பாதை திறக்கப்பட்டது.

இருந்ததுபோதும் குறித்த மதுபான உற்பத்தி தொழிற்சாலைக்குள் வேலை செய்யவந்த கட்டிட நிர்மாண வேலையை முன்னெடுக்கும் நிறுவன ஊழியர்களை தடுத்துநிறுத்தி தங்களின் பணத்தினை வழங்கினால் மாத்திரம் உள் நுளைய அனுமதிக்கப்படும் எனத் தெரிவித்து அவர்களை பல மணி நேரங்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுத்துவைத்திருந்தனர்.

இதன் பின்னர் உடனடியாக இந்தியாவில் இருந்து வருகைதந்து வேலை செய்யும் தொழிலாளிகளையும் வெளியேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததையடுத்து அங்கிருந்த இந்தியர்கள் அனைவரும் வேலைத்தளத்தில் இருந்து உடனடியாக வெளியேறினர்.

இதன் பின்னர் தங்களின் பணங்கள் வழங்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில் உரிய கம்பனியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்ததினை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இதன்போது ஒருவருக்கு 48 இலட்சம் மற்றும் 8 இலட்சம் ரூபா வழங்கவேண்டிய நிலையிலேயே தொழிலாளர்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.