மனிதர்கள் மட்டும் தான் மனிதாபிமானம் உள்ளவர்களா? அதற்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உணர்த்தும் வகையில் ரோட்டில் சுற்றிய நாய்குட்டியை ஒரு குரங்கு அரவணைத்து உணவு ஊட்டிய நெகிழ்ச்சியான சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
கோவையை அடுத்த பெரியநாயக்கன் பாளையத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் உள்ளது. இதன் எதிரே ஏராளமான புளிய மரங்கள் உள்ளன. இந்த மரத்துக்கு அவ்வப்போது மலைபகுதிகளில் இருந்து குரங்குகள் வந்து செல்லும். அதே போல் இன்றும் குரங்குகள் அதிகளவில் வந்தது. அப்போது மரக்கிளையில் குரங்குகள் விளையாடி கொண்டு இருந்தது.
அந்த நேரத்தில் புளியமரத்தின் கீழ் ஒரு நாய்குட்டி குளிரில் நடுங்கியப்படி தவித்து கொண்டு இருந்தது. இதை நீண்ட நேரமாக பார்த்த ஒரு குரங்கு திடீரென மரத்தில் இருந்து வேகமாக கீழே இறங்கியது. பின்னர் குட்டி நாயை தூக்கி கொண்டு அதே வேகத்தில் மரத்துக்கு சென்றது. பின்னர் அந்த குட்டி நாயை தனது மடியில் வைத்து தடவி கொடுத்தது. மேலும் நாயின் தலை மற்றும் உடலில் தட்டி கொடுத்து அரவணைத்தது.
இதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பின்னர் அவர்கள் பன் வாங்கி கீழே போட்டனர். அப்போது நாய்குட்டியை, பி.எஸ்.என்.எல். அலுவலக போர்டின் மேல் பத்திரமாக வைத்து விட்டு குரங்கு கீழே இறங்கி பன்னை எடுத்து சென்றது. தொடர்ந்து நாய் குட்டியை பத்திரமாக தூக்கி கொண்டு மரத்தின் உச்சிக்கு சென்றது. அங்கு வைத்து நாயை தனது மடியில் வைத்து குரங்கு பன் ஊட்டியது. இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை பலரும் செல்போனில் படம் பிடித்தனர். தொடர்ந்து நாய்குட்டி குரங்கின் அரவணைப்பிலேயே இருந்துவருகிறது. குரங்கின் இந்த தாய்மை குணம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
விலங்குகள் என்றால் மோதல் தான் இருக்கும் என்ற நிலையை மாற்றி எங்களுக்கு பாசமும் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் குரங்கின் நடவடிக்கைகள் இருப்பதாக பொதுமக்கள் பேசி சென்றனர். இந்த காட்சியை காண அங்கு அதிகளவில் கூட்டம் கூடியது. ஆனாலும் எதைப்பற்றியுமே கண்டு கொள்ளாமல் நாயை அரவணைப்பதில் மட்டுமே குறியாக இருந்தது அந்த குரங்கு!







