முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜப்பானுக்கான விஜயத்தை அவசரமாக நிறைவு செய்து நாளை வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு வருகின்றார்.
நீதிமன்ற தடை உத்தரவை மீறி அம்பாந்தொட்டையில் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதை அடுத்தே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக நாடு திரும்புகின்றார்.
மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு வழங்குவதை கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியினர் அம்பாந்தொட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள இந்திய கொன்சியூலர் அலுவலகத்திற்கு முன்பாஇந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அதன் பின்னரான நிலைமையை கட்டுப்படுத்த பொலிசார் கண்ணீர்புகை தாக்குதல் மற்றும் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
இந்த நிலையிலேயே நேற்று முன்தினம் மாலை அம்பாந்தொட்டை பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நாமல் ராஜபக்ஷ , பிரசன்ன ரணவீர மற்றும் டி.வி. சானக உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்களின் கைதுகள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவிய போதே , வெள்ளிக்கிழமை நாடு திரும்ப உள்ளமை தொடர்பில் அவரது பிரத்தியேக செயலாளர் உதித் லொக்குபண்டார தெரிவித்தார்.
இதேவேளை அரசாங்கத்திற்கு எதிரான ஜனநாயக போராட்டங்களை பொலிசாரை கொண்டு அடக்குவது ஏற்புடையதல்ல. எனவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பிய பின்னர் வலுவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கூட்டு எதிர் கட்சி தீர்மானித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தேசிய சொத்துக்களை விற்பனை செய்வதை கூட்டு எதிர் கட்சி கொள்கை ரீதியாகவே எதிர்க்கின்றது. நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்தை அந்நிய நாடு ஒன்றிக்கு வழங்குவதானது அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்துகின்றது. எனவே இந்த போராட்டத்தை நிறுத்த போவதில்லை. கைதுகள் எமக்கு புதியவையல்ல. மஹிந்த ராஜபக்ஷ வெள்ளிக்கிழமை நாடு திரும்பியதும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து பாரிய போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.