விடுதலைப்புலிகளின் காலத்தில் செயற்படுத்தப்பட்ட கைவேலி 25 வீட்டுத்திட்டத்தில் வாழ்ந்த மக்கள் இறுதிப்போரின் பின்னர் மீள அவ்விடத்தில் வாழமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
கைவேலி 25 வீட்டுத்திட்ட மக்களை நேற்றைய தினம்(15) மாலை வடமாகாணசபை உறுப்பினரை நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள பொதுமக்கள்,
மீள்குடியேற வருகைதந்தபோது பாதுகாப்பு அறிவித்தல் ஊடாக இவ்விடப்பரப்பு தடைசெய்யப்பட்ட இடமாக காட்டப்பட்டிருந்தது.
பின்னர் அறிவித்தல் பலகை எடுக்கப்பட்டதும் வனவளப்பாதுகாப்பு பிரிவினரால் எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளது.
தாம் குடியிருக்க இடம் இல்லாது இன்று வரை உறவினர்களின் வீடுகளிலும் அவர்களின் காணிகளிலும் குடியிருப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இறுதி யுத்தம் வரை தாம் வாழ்ந்திருந்த வீடுகளின் எச்சங்கள், பயன்படுத்திய கிணறுகள், நாட்டிய மரங்கள், பூங்கன்றுகள் என அனைத்தையும் அவர்கள் எனக்கு காண்பித்தனர் என வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.
மேலும், சந்திப்பு நிறைவில் குறைமுன்வைப்பறிக்கை ஒன்றையும் என்னிடம் கையளித்தனர். மீள்குடியேறிய காலம் தொட்டு இன்றுவரை அவர்கள் தங்களின் சொந்த இடத்திற்கு மீள்வதற்கான குரலை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
மக்களின் கருத்துகள் அனைத்தையும் கேட்டறிந்தேன். இது தொடர்பில் வடமாகாணத்தின் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசெல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் முல்லை மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலும் இது தொடர்பில் தான் கலந்துரையாடவுள்ளதாக ரவிகரன் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார்.