உலகின் இரண்டாவது உயரமான சிகரமாக கருதப்படும் K2 சிகரத்தை அடையவுள்ள கண்டி தர்மராஜ வித்தியாலய சாரணர் அணியினருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியுதவியை வழங்கி வைத்துள்ளார்.
குறித்த நிதியுதவியை ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் வழங்கி வைத்துள்ளனர்.
இந்த கடினமான சாதனைக்காக பத்து லட்சம் ரூபா நிதியுதவியும், K2 சிகரத்தில் ஏற்றுவதற்காக இலங்கை தேசியக் கொடி ஆகியவற்றையும் ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளார்.
பாகிஸ்தானின் வடக்கு மாகாணத்திலுள்ள உலகின் இரண்டாவது உயரமான சிகரத்தை அடைவதற்கு இலங்கை சாரணர் அணியினர் முதற்தடவையாக முன்வந்துள்ளனர்.
மலையேறும் 21 நாள் பயணத்துக்காக இலங்கை சாரணர் அணியினர் எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கையிலிருந்து செல்லவுள்ளார்கள்.
இந்த நிகழ்வில் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திலின பண்டார தென்னகோன், இலங்கை சாரணர் சங்க பிரதி ஆணையாளர் ஜே.பெர்னாண்டோ, கண்டி தர்மராஜ கல்லூரி அதிபர் ஜகத் கருணாரத்ன, சாரணர் அணி பொறுப்பாசிரியர் அனில் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







