நல்லூர் கந்தனின் மாம்பழ திருவிழா.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று (வெள்ளிக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது.
காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும் பிள்ளையாரும் வெளி வீதி உலா வந்து மாம்பழ திருவிழா இடம்பெற்றது.
சிவபெருமானும் உமாதேவியாரும் தமது பிள்ளைகளான முருகன் மற்றும் பிள்ளையாரிடம் உலகை முதலில் சுற்றி வருபவர்களுக்கு மாம்பழம் தருவோம் என கூறியபோது, முருகன் மயில்மேல் ஏறி உலகைச் சுற்றி பறக்க, பிள்ளையார் தன் பெற்றோரை சுற்றிவந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்ட புராணக்கதையை மையமாகக் கொண்டே இந்த மாம்பழ திருவிழா இடம்பெற்று வருகின்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை மறுதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.