வித்தியா வழக்கு – விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோரின் வாக்குமூலங்களை அனுமதி

புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கு தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் வடபகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோரின் வாக்குமூலங்களை பெற சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

Vidya-1-e1431678581970

வித்தியா கொலை தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட உதவி காவற்துறைமா அதிபர் லலித் ஜயசிங்க ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது அரச சட்டத்தரணியினால் இந்த தகவல் வெளியிடப்பட்டது.

லலித் ஜயசிங்கவை பிணையில் செல்ல அனுமதிக்க வேண்டும் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றில் கோரிக்கை முன்வைத்தார்.

எனினும் சந்தேக்குரியவர் முன்னிலை காவற்துறை அதிகாரி என்ற வகையில் பிணை வழங்கப்பட்டால் அவரால் சாட்சியங்களுக்கும் சான்றுகளுக்கும் தலையீடு ஏற்பட வாய்ப்புள்ளது.

 

எனவே அவருக்கு பிணை வழங்கக்கூடாது என அரச சட்டத்தரணி நாகரட்ணம் நிஷாந்த் கோரிக்கை விடுத்தார்.

கொலையில் சம்பந்தப்பட்ட சந்தேகத்துக்குரியவர் தொடர்பில் கடந்த வழக்கு திகதியின் போது காணொளி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அந்த காணொளியின் அடிப்படையில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வட பகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஆகியோரின் வாக்குமூலங்களை பெறுவதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இந்த அனுமதி கிடைத்ததும் அவர்களின் வாக்குமூலங்கள் பெறப்படவுள்ளன.

அத்துடன் மேலும் நான்கு காவற்துறை அதிகாரிகள் மற்றும் பொது மக்களிடமும் சாட்சிகள் பெறப்படவுள்ளன.

எனவே சந்தேகத்துக்குரிய காவற்துறை மா அதிபருக்கு பிணை வழங்கக்கூடாது என அரச தரப்பு சட்டத்தரணி வாதிட்டார்.

இதனையடுத்து லலித் ஜயசிங்கவை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.