புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் எங்களை திசை திருப்பி V.T. தமிழ்மாறனை காப்பாற்றும் நோக்கில் சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் நபர் ஒருவர் செயற்பட்டு வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் துவாரகேஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், அவர் இலங்கைக்கு வர முடியாமல் இருப்பதாகவும் துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், “மகேஸ்வரன் குடும்பத்தினர் மீது பழி சுமத்துவதன் மூலம் குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியும் என நினைப்பது பிழையான ஒன்று.
கடந்த 2015ஆம் ஆண்டு யாழ். புங்குடுதீவில் V.T. தமிழ்மாறனால் ஒழுங்கு செய்யப்பட்டு, சிரேஸ்ட பொலிஸ்மா அபதிபர் லலித் ஜயசிங்க உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இடம்பெற்ற காணொளி ஒன்றே அண்மையில் ஊடகங்களில் செய்தியாக வெளியாகியிருந்தன.
அவ்வாறு வெளியான செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது. சுவிஸ் குமார் கொழும்புக்கு தப்பிச் சென்றமை தொடர்பில் யாரும் முறைப்பாடு செய்யப்படாத நிலையில் நாங்களே முறைப்பாடு செய்திருந்தோம்.
இதன் காரணமாகவே சுவிஸ் குமார் கொழும்பு வெள்ளவத்தையில் வைத்து கைது செய்யப்பட்ட நிலையில், இன்று இரண்டு ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அதன் காரணமாகவே, இந்த வழக்கு விசாரணைகள் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டுள்ளதுடன், இரத்த மாதிரி மற்றும் மரபணு என்பன ஒத்துப்போகவில்லை.
மேலும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணை கொழும்புக்கு மாற்றுவதற்கு முயற்சிக்கப்பட்டது. அதற்கு எதிராகவும் நாங்கள் காத்திரமாக செயற்பட்டு இன்று விசாரணைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றன.
பல தடைகள் ஏற்படுத்தப்பட்டன. அத்தனை தடைகளையும் தாண்டி இன்று வித்தியா படுகொலை வழக்கு இந்த கௌரவமான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரையில் ஓயப்போவதில்லை.
சுவிஸ் குமாரையோ, அல்லது இந்த படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஏனையவர்களையோ, அல்லது புங்குடுதீவு மாணவி வித்தியாவையே நான் முன்பின் கண்டதே கிடையாது.
இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் எங்களை திசை திருப்பி V.T. தமிழ்மாறனை காப்பாற்றும் நோக்கில் சுவிட்ஸர்லாந்தில் இருக்கும் நபர் ஒருவர் செயற்பட்டு வருகின்றார்.
அத்துடன், இலங்கையிலிருந்து சுவிட்ஸர்லாந்திற்கு தப்பிச்சென்ற அவர் வித்தியா படுகொலை வழக்கில் என்னை சிக்க வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என துவாரகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.